மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச 26-ஆம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திடீரென பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகினர். இதனால், முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், இந்த பரபரப்பான சூழலில் மத்திய பிரதேச சட்டப்பேரவை இன்று கூடியது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்து சேர்ந்தனர். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் லால்ஜி டாண்டன் உரையாற்றினார். அப்போது அவர், ஜனநாயக மரபுகள் படி செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதை அடுத்து, கமல்நாத் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 26-ஆம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து சபாநாயகர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.